Lord Skanda-Murugan
 

Valli Teyvani Samedha Murugan
Valli Teyvani Samedha Murugan
Valli Murugan
Valli Murugan
Valli Kumarar
Kumarar

முருகனின் பல்வேறு தோற்றங்கள்

திருமதி எஸ். பாலாம்பாள்

Original article in English: "Facets of Murukan" by Prof. Dr. Mrs. V. Balambal

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

This paper was originally presented at the Second International Conference on Skanda-Murukan, Mauritius, April 2001.

ந்து தெய்வங்களில் பல கடவுட்களும், பெண் தெய்வங்களும் உண்டு. அவர்களில் மூல தெய்வங்கள், மற்றும் அதற்கு அடுத்த நிலை தெய்வங்கள் என பிரிவுகளும் உண்டு. சிவன், சக்தி, விஷ்ணு, லஷ்மி, சரஸ்வதி, கணபதி மற்றும் முருகன் போன்றவர்கள் மூல தெய்வங்கள். அய்யனார், மாரி அம்மான், முனீஸ்வரன், மற்றும் மதுரை வீரன் போன்றவர்கள் கிராம தெய்வங்கள். அவர்கள் அனைவரையும் விட தமிழர்கள் அதிகமாகப் போற்றி வணங்குவது தமிழ் கடவுள் என கருதப்படும் முருகனைத்தான்.

முன்னொரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்திருந்த இடங்களை ஐந்து பிரிவுகளாக பிரித்திருந்தார்கள். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாளை என்பன. குறிஞ்சி என்ற பகுதி மலைப் பகுதியாக இருந்ததினால் அங்கிருந்த மலைவாழ் மக்கள் முருகனையே போற்றி வணங்கினார்கள். சங்க இலக்கியத்தில் அவரை சீயோன் அல்லது கொரவைசெல்வன் என்றே குறிப்பிட்டு உள்ளார்கள். முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் வணங்கப்பட்டு வந்துள்ளார். அவருடைய ஆலயங்கள் பெரும்பாலும் மலைகளிலேயே அமைந்து உள்ளன என்பதின் காரணம் அவர் மலைப் பிரதேசத்தை சேர்ந்த கடவுளாகக் கருதப்படுவதுதான்.

முருக பக்தனுக்கு முருகன் பெரிய கடவுள் என்றாலும், ஆராய்ச்சியாளர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இல்லை. ஆராய்ச்சியாளரின் எண்ணத்தில் முருகன் தனித் தன்மை வாய்ந்தவர், மற்றும் அவருக்கு பல முகங்கள் (நிலைகள்) உண்டு என்பதே. இந்தக் கட்டுரை அவற்றை விவரிக்கின்றது. முருகன் யார்?

  1. சிவபெருமானுக்குத் தகுந்த மகன்
  2. கிருத்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்டவர்
  3. கணேஷா எனும் வினாயகரின் அன்புச் சகோதரர்
  4. தேவர்களின் படைத் தலைவர்
  5. அசுரர்களை அழித்தவர்
  6. தேவசேனாவின் கணவர்
  7. வள்ளியின் அன்புக்குரியக் கணவர்
  8. மலை வாழ் கடவுள்
  9. சிவபெருமானுக்கே குருவானவர்
  10. பந்தங்களைத் துறந்தவர்
  11. சங்கக் கடவுள்
  12. அகஸ்தியருக்கு ஆசிரியரானவர்
  13. ஐந்து பெரும் கடமைகளை செய்பவர்
  14. அறியாமை மற்றும் செருக்கை அகற்றுபவர்
  15. அழகும், இளமையும் நிறைந்தவர்
  16. பக்தர்களுக்கும், பகைவர்களுக்கும் நன்மை அளிப்பவர்
  17. ஞானத்தை தந்து அருள் புரிபவர்
  18. பழங்குடியினர், நகரத்தார், அரசவம்சத்தினர், தெய்வீகம், மிருகங்கள் மற்றும் பறவைகளின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்துபவர்
  19. ஒற்றுமையை நிலை நாட்டுபவர், முஸ்லிம் சமுதாயத்தினராலும் வணங்கப்படுபவர்
  20. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்புகளை எடுத்துக் காட்டுபவர்

இவை அனைத்தையும் வெளிப்படுத்தும் நூல்களும், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியவைகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இரண்டாம் நிலை ஆதாரங்கள். சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் , குறுந்தொகை மற்றும் சிலப்பதிகாரம் போன்றவை. அவற்றைத் தவிர திருமந்திரம் , திருப்புகழ் ,கந்தர் ஷஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் ,கந்தர் அனுபூதி , கந்தரான்ததி, ஷண்முகக் கவசம் , முத்துக்குமாரஸ்வாமிபிள்ளைத் தமிழ், சுப்பிரமணிய புஜாங்கம்,தணிகை புராணம் மற்றும் குமார சம்பவம் போன்றவையும், முருகனின் பல ஆலய தல புராணங்கள் போன்றவை முதல் நிலை அதாவது மூல நிலை ஆதாரங்களாக உள்ளன. முருகனின் ஆறுபடை வீடு மற்றும் பிற தலங்களையும் ஆதாரங்களாகக் கொள்ள முடியும்.

சிவபெருமானுக்குத் உகந்த மகன்

முருகனைப் பற்றி எழுதி உள்ள பல புராணங்களும் முருகனும், சிவபெருமானும் ஒருவரே என்றே தெரிவிக்கின்றன. சிவபெருமானின் ஒளியே ஆறுமுக முருகனான கந்தனைப் படைத்தது. அவரும் சிவபெருமானும் ஒருவரே (திருமந்திரம்: இன்தை பெருமானுக்கு இருமூன்று வட்டமாய்). சிவபெருமானுக்கும் ஆறு முகங்கள், அது போல முருகனுக்கும் ஆறு முகங்கள் உள்ளதினால் இருவரும் ஒன்றே (திருமந்திரம் ஆறுமுகத்தில் ஆடிப்பாடி). தம்மை துன்புறுத்தி வந்த அசுரர்களை அழிக்க ஒருவரைப் படைக்குமாறு தேவர்கள் வேண்டிக் கொண்டதினால், சிவபெருமான் அவரைப் படைத்தார். தன்னுடைய மூன்றாவது கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தி, அதை வாயு பகவானிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்டவர், அதைக் கொண்டு போய் கங்கையில் போட, கங்கையோ அதைக் கொண்டு போய் ஹிமயமலை அடிவாரத்தில் இருந்த சரவணப் பொய்கையில் தள்ளியது.

ஆறு தீப் பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுக்க , அவற்றை எடுத்து கிருத்திகைகள் வளர்க்க, சிவனும், பார்வதியும் அந்த இடத்துக்குச் சென்றப் பின், பார்வதி அந்த ஆறு குழந்தைகாளையும் எடுத்து அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும் ஒரே உடலைக் கொண்ட குழந்தையாக, ஆனால் ஆறு முகங்கள், பன்னிரண்டு கண்கள் மற்றும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை அசுரர்களை அழித்து, பக்தர்களுக்கு அருள் புரியும் , ஞானக் குழந்தையாக ஆயிற்று என்பதினால் சிவபெருமானுக்கு உகந்த மகனாக கருதப்பட்டது. சிவபெருமானே ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர். முருகனின் பிறப்பு, இயற்கையின் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு இருந்தது.

Birth of Karttikeya, son of Siva and Parvati

சக்தி தேவியின் செல்லப் பிள்ளை

கொரவாட்டி, பார்வதி மற்றும் உமா என்ற பெயர்களைக் கொண்ட சக்தி தேவியானவள் பெரும் சக்தி மிக்க கடவுள் ஆவார். அவளே அனைத்தையும் படைத்தவள் எனப்படுபவள். நேர்மை மிக்க சக்தி தேவி, நீதியை நிலை நாட்ட சிவபெருமானிடம் கூட சண்டை இடத் தயங்காதவள். சிவபெருமானுடன் சேர்ந்து அவள் அகண்டத்தில் ஆடிய நடனம் முனிவர்களுக்கும், தத்துவ ஞானிகளுக்கும் பல தத்துவங்களை எடுத்தக் காட்டியது. அசுரர்களின் தலைவனான சூரபத்மனை அழிக்க சக்தியே முருகனுக்கு சக்தி வேல் என்ற ஆயுதம் ஒன்றை தந்தாள். அவனை அழிப்பதற்குச் சென்ற முருகப் பெருமான் ஒரு மாமரத்தை அந்த வேலைக் கொண்டு இரண்டாகப் பிளந்து அவற்றில் இருந்து சேவல் மற்றும் மயிலை தோன்ற வைத்தார். சங்க இலக்கியங்களில் அவரை சிவப்பானவர் அல்லது ஒளிமயமானவார் என்ற பொருளில் சீயோன் என்றும், கொரவையின் மகன் என்ற அர்த்தத்தைத் தரும் கொரவை செல்வன் எனவும் அழைத்தார்கள். மாம்பழப் போட்டியில் தோற்றுப் போய் பழனி மலைக்குச் சென்று அமர்ந்த முருகனின் கோபத்தை சாந்தப்படுத்த எந்த அளவு சக்தி தேவி கவலையில் ஆழ்ந்தாள் என்பதில் இருந்தே அவர் மீது சக்தி கொண்டிருந்த அன்பின் அளவு புரியும் என்று புராணங்கள் கூறுகின்றன.

கிருத்திகை மகளினரின் வளர்ப்பு மகன்

அவதார தத்துவத்தை நன்கே அறிந்திருந்த சிவபெருமான், ஆறுமுகனைப் படைத்து, பார்வதியின் சகோதரரான திருமாலின் கட்டளைப்படி அவரை வளர்க்கும் பொறுப்பை கிருத்திகைகளிடம் ஒப்படைத்தார். கந்த புராணம் மற்றும் இன்னும் சில இலக்கியங்களில் அந்த செவிலித் தாய்கள் அந்தக் குழந்தையை எப்படி ஆதரவாகவும், அன்பாகவும் வளர்த்து வந்தார்கள் என்பதை விவரமாகக் கூறுகின்றது. முருகனை அந்த ஆறு கிருத்திகை செவிலித் தாயார்களும் எடுத்து வளர்த்ததினால்தான் அவர் கார்த்திகேயர் என்ற பெயரையும் அடைந்தார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரும் கிருத்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதமாகும். அது போல ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகனின் ஆலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. Ganapati Murugan

கணேஷாவின் அருமை சகோதரர்

கணேஷா அல்லது யானை முக கணபதி எனும் விக்னேஸ்வரக் கடவுளே முருகனின் மூத்த சகோதரர் ஆவார். நாரதர் கொடுத்த மாம்பழத்தை அடைவதில் இருவருக்கும் கருத்து வேற்றுமைகள் இருந்தது என்றாலும், கணேஷாவின் உதவியைக் கொண்டே முருகப் பெருமானால் வள்ளியை திருத்தணியில் மணக்க முடிந்தது. இதில் இருந்தே ஆரம்பம் எதுவும் நல்ல முறையில் முடிந்தடைய வினாயகரின் துணை தேவை என்பது புலனாகும். விநாயகரை துதித்தால் நமது தடைகள் விலகும். முருகன் அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளவர் என்றாலும், அவர் விரும்பியதை அடையவும் அவருக்கு அவருடைய சகோதரரான வினாயகரின் துணையே தேவையாக இருந்தது.

அசுரர்களை அழித்தவர். தேவர்களின் படைத் தலைவர்

தேவேந்திரனின் மகனான ஜெயேந்திரா மற்றும் பிற தேவர்களைப் பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்திய சூரபத்மனைக் கொல்லவே முக்கியமாக முருகன் அவதரித்தார். சூரபத்மனைத் தவிர அவனுடைய சகோதரர்களான தாரகா, சிங்க முகன் மற்றும் அவனுடைய சகோதரியான அஜமுகி போன்றவர்களும் தேவர்களை துன்புறுத்தி வந்தார்கள். சிவபெருமானின் மூன்றாம் கண்ணில் இருந்து வெளி வந்ததினாலும், சக்தி வேலை பார்வதியிடம் இருந்து பெற்றதினாலும் முருகன் தேவர்களின் படைத் தலைவரானார். அவருக்கு அந்த யுத்தத்தில் துணை புரிய, சக்தியின் சிலம்பில் இருந்து வெளிவந்த நவ சக்தி எனப்பட்ட வீரபாகுவும், அவருடைய எட்டு சகோதரர்களும் ஒரு லட்ஷ வீரர்களுடன் வெளி வந்தார்கள். தன்னுடைய பெற்றோர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு யுத்தத்திற்கு முருகன் புறப்பட்டு சென்றபோது அந்த நவ சக்திகளும், ஒரு லட்ஷப் படையினரும் அவருடன் சென்றார்கள்.

யுத்த தர்மத்தின்படி முதலில் வீரபாகுவை முருகன் சூரபத்மனிடம் தூதுவராக அனுப்பி தேவர்களை விடுதலை செயுமாறுக் கூறினார். ஆனால் சூரபத்மனோ அதை ஏற்க மறுத்து, முருகனை கேவலமாக ஏச, அங்கிருந்து வீரபாகு தப்பி வந்து முருகனுக்கு அந்த செய்தியை கூறினார். உடனே முருகனும் யுத்தத்திற்கு கிளம்பிச் சென்றார். முதலில் அவர் கதிர்காமனில் தனது படையினருடன் இளைப்பாறியப் பின் அங்கிருந்துக் கிளம்பி திருச்செந்தூருக்குச் சென்றார். யுத்தம் பத்து நாட்கள் தொடர்ந்தது. சூரன் அதில் பல உபாயங்களையும் கையாண்டான். அவனுடைய படையினர் தோற்று ஓடியதும் அவன் தன்னை ஒரு மாமரமாக உருமாற்றிக் கொண்டான். ஆனால் அதை புரிந்து கொண்ட முருகன் தனது சக்தி வேலினால் அந்த மரத்தை இரண்டு துண்டுகளாகப் பிளக்க ஒரு துண்டு சேவலாகவும், இரண்டாவது மயிலாகவும் மாறின. இப்படியாக தேவர்களின் படைத்தலைவர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி யுத்தத்தில் வென்றார். இந்து சமயத்தில் ஆற்றல், பலம் மற்றும் வெற்றி போன்ற அனைத்தையும் முருகனை ஒப்பிடுகிறார்கள். அந்த சூரனை வெற்றி கொண்ட தேவசேனாபதி , சூரபத்மனால் சிறைப் பிடிக்கப்பட்டு இருந்த அனைத்து தேவர்களையும் விடுதலை செய்தார்.

Devasenapati

தேவசேனாவின் கணவர்

சூரபத்மனை அழித்து தேவர்களுக்கு விடுதலை கொடுத்த ஸ்கந்தனுக்கு பரிசு கிடைத்தது. ஸ்கந்த புராணத்தில் முருகனுடன் தேவசேனாவிற்கு திருமணம் ஆன செய்தி விரிவாக தரப்பட்டு உள்ளது. ஜெயந்தாவும் தேவர்களும் சூரபத்மனின் பிடியில் இருந்து விடுதலை ஆனதும் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றார்கள். சூர சம்ஹாரத்துக்குப் பிறகு திருச்செந்தூரில் இருந்து கிளம்பி திருப்பரம்குன்றத்துக்குச் சென்ற முருகனை இந்திரனும் பிரும்மாவும் சந்தித்தார்கள். அங்கு அவரை சந்தித்தவர்கள் அவரை தேவசேனாவை மணந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். திருமணத்துக்கான நல்ல நேரத்தை பிரும்மா பார்த்து முடித்ததும் முருகனின் பெற்றோர்கள் மற்றும் அனைவர் முன்னிலையிலும் தேவசேனாவை முருகன் மணந்து கொண்டார். இந்து சமய முறையில் எப்படி ஒரு பெண்ணின் பெற்றோர்கள் தமது பெண்ணை மணமகனுக்கு தானமாகக் கொடுத்து திருமணத்தை நடத்துவார்களோ அப்படியேதான் அவருடைய திருமணம் நடந்தது என்ற விரிவான செய்தியை ஸ்கந்த புராணத்தில் கூறி உள்ளார்கள் ஸ்கந்தனுடனான தேவசேனாவின் திருமணம் முறைப்படி அனைவராலும் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது என்றால் வள்ளியுடன் முருகன் செய்து கொண்ட திருமணம் களவு மணம் அதாவது இரு ஜாதியினர் செய்து கொண்ட காதல் திருமணம் என்பதாகும். முருகன் அழகானவர், இளமையானவர், தேவர்களை அசுரனிடம் இருந்து விடுவித்தவர் போன்ற பல குணங்களைக் கொண்டவர். அது போலவே தேவசேனாவும் அரச குடும்பத்தை சேர்ந்தவர், நல்ல பண்புகளைக் கொண்டவர், நன்கு வளர்க்கப்பட்டவர், பெரியவர்களுக்கு கீழ் பணிந்து நடந்தவர் போன்ற குணங்களைக் கொண்டு இருந்தார்.

Valli Amma

வள்ளியின் பிரிய நாயகர்

தேவர்களின் படைத் தலைவரான முருகன் மலைவாழ் பெண் வள்ளியின் கரத்தைப் பிடித்தது இன்னொரு கதை ஆகும். வள்ளியை மணந்ததின் மூலம், தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை சர்வ வல்லமை பெற்ற கடவுளான முருகன் அனைவருக்கும் காட்டினார். நம்பிராஜன் என்ற வேடனால் வளர்க்கப்பட்ட வள்ளி, முருகன் மீது மையல் கொள்ள, அவளை தன் வசப்படுத்தி அவளது காதலை அடைய வேண்டும் என்று எண்ணிய முருகன் ஒரு வேடவர் போல, மரத்தைப் போல, ஒரு கிழவரைப் போல பல ரூபங்களைக் எடுத்துக் கொண்டார். ஆனால் தன்னுடைய சகோதரரான கணேசரின் துணையை பெற்றுக் கொள்ளும்வரை அவரால் அவளை அடைய முடியவில்லை. அவருடைய மூத்த சகோதரர் ஒரு யானையின் உருவில் வந்து வள்ளியை பயமுறுத்தி முருகனை ஏற்றுக் கொள்ள வைத்தார். அவளுடைய வேடவர்களின் குடும்பத்தின் குலதெய்வம் முருகன் என்றாலும் , வள்ளியின் காதலர் வேலனே என்பதை அறிந்து கொள்ளா முடியாத அவர்கள் கார்த்திகேயரை தாக்க முயன்றாலும், அவர்களையும் அவரால் வெல்ல முடிந்தது.

முருகனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டதும் தமது தவறை உணர்ந்தவர்கள் அவருக்கு வள்ளியை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தார்கள். திருத்தணியில் அவர்களது திருமணம் நடைபெற்றது. வள்ளி வலது பக்கத்திலும், தேவசேனா அவருடைய இடது பக்கத்திலுமாக காட்சி தருகிறார்கள். அவருடைய வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் இருந்தாலும், வள்ளியின் கையில் உள்ள தாமரை மலரோ , இல்லை தேவசேனாவின் கையில் உள்ள லில்லிப் பூவோ வாடவில்லை. அந்த இரண்டு தெய்வீக பெண்களுடனான திருமணத்தின் மூலம் முருகன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் காதல் திருமணம் என்ற இரண்டையுமே அங்கீகரிப்பதைக் காட்டுகிறது. பக்தர்களும், புலவர்களும் முருகன் மீது வள்ளி கொண்டு இருந்த ஆதிக்கத்தைக் எடுத்துக் காட்டி உள்ளார்கள்.

Tiru Avinankudi, Palani

மலைக் கடவுள்

குறுஞ்சி மலையின் கடவுளே முருகப் பெருமான். அநேகமாக அனைத்து மலைகளிலுமே முருகனின் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் விசேஷமாக கூற வேண்டியது அவர் வசிப்பதாக கூறப்படும் ஆறு இடங்களான ஆறுபடை வீடுகள் என்பன. திருப்பரம்குன்றத்தில் அவர் தேவசேனாவை மணந்து கொண்டார். திருச்சிரளைவை (திருச்செந்தூர்) என்ற இடத்தில் அவர் சூரபத்மனை வதம் செய்தார். திருவாவினன்குடியில் துறவறம் கொண்டு பழனி ஆண்டவரானார். பிரணவ மந்திரத்தை அவருடைய தந்தைக்கு ஓதிய இடமே திருவேரகம் (ஸ்வாமிமலை). குன்றுதோரட்டல் மற்றும் பழமுதிர்சோலையில் வள்ளி மற்றும் தேவசேனாவுடன் இருப்பவர். ஆறுபடை வீடுகளைப் பற்றி எழுதி உள்ள இலக்கியங்களில் முருகப் பெருமானின் பராக்கிரமங்களைப் பற்றிக் கூறி உள்ளார்கள். அகநானூறு, புறநானூறு, கலித்தொகை , நாரினை, தொல்காப்பியம், குறிஞ்சிப்பாட்டு, மலைப்பாடுகளம் போன்றவற்றில் முருகனை பற்றிக் குறிப்பிடுகையில் அவரை மலைகளின் கடவுள் எனப் பாடி உள்ளார்கள்.

விசேஷ நாட்களில் பக்தர்கள் கிராமியப் பழக்கத்தை எடுத்துக் காட்டும் விதமாக மலை மீது காவடி ஏந்திச் சென்று தமது பக்தியைக் காட்டுகிறார்கள். தைபூசம், கிருத்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், போன்ற தினங்களில் வேலனுக்கு விசேஷமான வழிபாட்டை செய்கிறார்கள். தற்காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களைப் போலவே, முருகனை தரிசனம் செய்ய பாதயாத்திரையாக செல்பவர்கள் நாற்பது நாட்கள் விரதம் இருக்கின்றார்கள். அதில் காவடி முக்கியப் பங்கு பெறுகிறது. முருகனின் பல வீடுகள் எனப்படும் ஆலயங்களைப் பற்றி செய்திகள் திருமுருகாற்றுப் படை மற்றும் திருப்புகழ் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிஞ்சிக் கடவுள் மலைகளில் உள்ள பல ஆலயங்களிலும் வழிபடப்படுகிறார்.

Swaminatha

சிவபெருமானுக்கு குருவானவர்

முருகனை தகப்பன் ஸ்வாமி அல்லது ஸ்வாமினாதன் என்பார்கள். அதாவது தந்தைக்கே குருவானவர் என்று அர்த்தம். ஸ்வாமிமலைக்கு அப்படி பெயர் வந்ததின் காரணக் கதை ஒன்று உண்டு. ஒருமுறை கைலாயத்துக்குச் சென்ற முருகனை பிரும்மா அவமதித்து விட்டார். ஆகவே அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய முருகன் பிரும்மாவிடம் பிரணவ மந்திரமான ஓம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். ஆனால் பிரும்மாவினால் அதற்கு பதில் கூற முடியாததினால் அவர் தலையில் ஓங்கி அடித்த முருகன் அவரை பிடித்து சிறையிலும் அடைத்து விட்டார் (ஆதி சங்கரரின் ஸ்ரீ சுப்பிரமணிய புஜாங்கம்- ஸ்லோகம் 12). பிரும்மா சிறை வைக்கப்பட்டதினால் படைப்புக்கள் நின்று விட சிவபெருமானே முருகனை சந்தித்து அதன் விளக்கத்தை தனக்குக் கூறுமாறு முருகனிடம் கேட்க, சிவபெருமானிடம் அவர் தனக்கு சிஷ்யனாக இருந்து அதைக் கேட்க சம்மதித்தால் அதன் அர்த்தத்தைக் கூறுவதாகக் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட சிவப்பெருமான் சிஷ்யனாக மாற குருவான முருகன் அதன் அர்த்தத்தைக் கூறினார். (குமரகுருபரர், கந்தர்கலை வெண்பா 90 –98).

ஆகவே அவரை ஸ்வாமினாதன் அல்லது குருநாதன் என அழைத்து அவர் தங்கி இருந்த மலைவீட்டை ஸ்வாமி மலை அல்லது திருவேரக்கம் என அழைத்தார்கள் (அருணகிரிநாதர், திருப்புகழ் ). சர்வ வல்லமைப் படைத்த சிவபெருமானோ தன்னுடைய மகன் முன்பு அடங்கி நிற்க வேண்டி இருந்தது. இதன் தத்துவம் என்ன என்றால் அதீத ஞானம் படைத்தவர்கள் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்களுக்கு முன்னாள் சர்வ வலிமைப் படைத்தவர்களும் அடங்கியே இருக்க வேண்டும் என்பதே. அருணகிரிநாதரின் கூற்றின்படி முருகப் பெருமானே பிரணவ மந்திரம் என்றும், சிவனும் முருகனும் ஒன்றே என்றாலும், அதன் அர்த்தத்தை அவருடைய வாயால் கேட்பதே மகிழ்ச்சியை அளிக்கும் என்றே இறைவன் கருதினார் (கந்தரலங்காரம், v. 55 / கந்தர் அனுபூதி v. 36) என்றார். ஞானப் பண்டிதரான முருகன் (Tiruppukal 100) அடக்கமே நற்பண்பு என்பதையும், தற்பெருமையுடன் கூடிய ஞானம் அழிவிற்கு காரணமாகி விடும் என்று இதன் மூலம் காட்டுகிறார்.

Dandayudhapani

ஆசைகளைத் துறந்தவர்

நாரத முனி ஒரு மாம்பழத்தை கைலாசத்திற்கு கொண்டு போய்க் கொடுத்து கணேஷா மற்றும் முருகனுக்கு இடையே மனக்கசப்பை ஏற்படுத்தினார் (பழனி ஸ்தலபுராணம் ). முருகன் அதில் ஏற்பட்ட போட்டியில் தோல்வியடைந்ததினால் தன்னிடம் இருந்த அனைத்து செல்வம், மற்றும் அரசைத் துறந்து விட்டு ஆவினன்குடி அல்லது பழனியை அடைந்தார். அவரை அங்கு முற்றிலும் துறந்தவர் என்று அழைக்கின்றார்கள். அங்கு மிகச் சிறிய உடையை மட்டுமே அணிந்து கொண்டு, ருத்ராக்ஷா மற்றும் ஒரு தண்டத்தை ஏந்திக் கொண்டு நிற்கின்றார் (திருப்புகழ் , 117). அவரே விவேகப் பழமான ஞான பண்டிதர். தலைகனம் மற்றும் செருக்கு தோல்வியையே தரும் என்றும், அடக்கமும், முன் யோசனையும் மட்டுமே வெற்றியைக் கொடுக்கும் என்பதை வெளிப்படுத்துவதே இந்த சம்பவம் நடந்துள்ளது. அடக்க குணமும் மற்றும் எளிமையும் நிறைந்த கணேஷா அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர். ஒவ்வொருவரும் கோபத்தை துறக்க வேண்டும். சாதாரணமான ஒரு மாம்பழத்திற்காக முருகன் பெரிய நாடகமாடி விட்டதாக இது தோற்றத்தை தந்தாலும், பின்னர் அவர் தண்டாயுதபாணி கோலத்தை மேற்கொண்டதின் மூலம் அதிக ஆசையும், அவசர காரியங்களும் முடிவாக அனைத்தையும் துறக்க வைக்கும் மன நிலையில் கொண்டு சென்றுவிடும் என்பதை உணர்த்துகின்றது.

தமிழ்க் கடவுள் மற்றும் தமிழ் சங்கத் தலைவர்

முருகனை தமிழ் கடவுள் என்றும் இரண்டாம் சங்கத்தின் தலைவர் என்றும் கூறுவார்கள். முருகன் சங்கத்தின் முதல் தலைவரான அகத்தியருக்கே தமிழைக் கற்றுக் கொடுத்தவர் என்றும் கூறுகிறார்கள். இது தமிழுக்குக் கிடைத்துள்ள பெருமையும், அதன் புனிதம் மற்றும் மேன்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. தமிழ் சங்கத்தில் மெத்தப் படித்த அறிவு ஜீவிகளே உறுப்பினர்களாக இருந்ததினால் அதன் நடைமுறைகளும் நன்கே இருந்தன. தமிழ் மொழியும் முருகனுடன் இணைந்தே இருந்தது.

இளமையும் அழகையும் கொண்டவர்

முருகன் என்றால் இளமையானவர், மணம் மிக்கவர், தெய்வீக அழகுடையவர் என்று பொருள். குமரன் என்றாலும் இளமையானவர் என்றே பொருள். அழகு என்பது இதயத்தை சுத்தப்படுத்துகிறது. இளமை என்பது நோய் நொடிகள் அற்ற தன்மையைக் கொடுக்க, மணம் என்பது சுத்தமான சூழ்நிலையில் இருக்க வைக்க, தெய்வீக அருள் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடன் இருக்க வைக்கின்றது. (N.P. சண்முகம், முருகன் சமயம் – அதன் முக்கியத்துவமும், தற்கால மனிதர்களும்,1998, சென்னை). அழகையும், இளமையையும் குறிக்கும் விதத்தில் அவரை முருகன், அழகன், குமரன் போன்ற பெயர்களில் அழைக்கின்றார்கள். சங்க இலக்கியங்களில் கார்த்திகேயரின் இந்த குணங்களைக் குறித்து நிறையவே எழுதப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு நன்மை செய்தவர்

அகஸ்தியர்

முருகன் தனது பக்தர்களுக்கு நிறைய நன்மைகளை செய்தவர். அகஸ்தியர் முதல் சாதாரண மனிதர்வரை தன்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் அளவற்ற அருளை பொழிந்தவர். முதலாம் சங்கத் தலைவரான அகஸ்தியர் முருகனின் சிஷ்யர் ஆவார். வடக்கில் இருந்து தெற்குப் பகுதிக்கு வந்த அந்த முனிவருக்கு முருகனே தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தாராம். (அருணகிரிநாதர் , சேவல் விருத்தம் , ll 14 – 16). முருகனே அகஸ்தியருக்கு ஆசிரியராகவும், உபதேசம் செய்தவராகவும் இருந்துள்ளார் (தொட்டிகலை சுப்ரமணிய முனிவர் - தணிகை திருவிருத்தம்).

நக்கீரர்

நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் கார்க்கிமுகி என்ற பூதத்தினால் சிறை வைக்கப்பட்டு உண்ணப்பட இருந்த நிலையில், முருகனைப் போற்றும் நக்கீரர் திருமுருகாற்றுப் படையை பாட, முருகன் உடனே அங்கு வந்து அந்த பூதத்தைக் கொன்று அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தார். ஆறுமுகனின் அருள் இல்லை என்றால் அவர்கள் அனைவருமே அந்த பூததினால் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

சிகண்டி

உண்மையான ஒரு பக்தருக்கு கடவுள் எந்த வகையிலாவது வந்து உதவி புரிவார். சிகண்டி எனும் முனிவர் கதிர்காமத்தில் இருந்தபோது ஒரு மதம் பிடித்த யானை அவரைக் கொல்ல வந்தது. ஆனால் கொஞ்சமும் பயம் அற்ற அந்த முருக பக்தர் வெற்றிலைக் காம்பை கிள்ளி அதன் மீது போட்டார். உடனே அந்த வெற்றிலைக் காம்பு முருகனின் வேலாக மாறி அந்த மதம் பிடித்த யானையைக் கொன்றது. முருகன் மீதான நம்பிக்கையும், பக்தியும் அந்த முனிவரின் உயிரைக் காப்பாற்றியது.

Adi Shankaracharya

முச்சுகுண்டர்

வீரபாகுவின் மகளை மணந்து கொண்ட முருக பக்தர் இவர். முச்சுகுண்டர் அசுரர்களைக் கொன்றார். அதற்குப் பின் தேவலோகம் சென்று இந்திரன் வழிபட்டு வந்த சோமஸ்கந்தனின் சிலையை அதற்குப் பரிசாகக் கேட்டார். இதில் இருந்தே அவர் எந்த அளவிற்கு சிவபெருமான் மற்றும் முருகன் மீது பக்தி கொண்டு இருந்தார் என்பது விளங்கும்.

ஆதி சங்கரர்

அத்வைத்யத்தை போதித்த ஆதி சங்கரர் சைவ சமயத்தை சார்ந்த தத்துவஞானி. சங்கரரின் எதிரியான அபினவ குப்தா என்பவர் சங்கரருக்கு உடல் உபாதைக் கொடுத்து அவரை வேதனைப் படுத்தினார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி அவரை திருச்செந்தூரில் உள்ள ஜெயந்திபுரத்துக்கு சென்று அங்கு முருகனை வேண்டுமாறுக் கூறினார். சங்கரரும் ஜெயந்திபுரத்துக்குச் சென்று ஸ்கந்தனை வழிபடத் துவங்கியபோது அங்கு முருகனின் காலடியில் ஆதிசேஷன் விழுந்து வணங்கியதைக் கண்டார். உடனே அவர் பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் நிலையில் ஷண்முகரைப் போற்றும் ஷண்முக புஜாங்கம் என்ற பாடலை பட அவருடைய நோய் அவரை விட்டு அகன்றது. ஷண்முக புஜாங்கத்தை ஓதிக் கொண்டு திருநீரை அணிந்து கொண்டால் எப்பேற்பட்ட நோயும் விலகும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

அருணகிரிநாதர்

Arunagirinathar

முருகப் பெருமான் தீயவர்களுக்கும் அருள் புரிந்து அவர்களுக்கு நன்மைகளை தருகிறார். பல தீய பழக்கங்களுக்கும் அடிமையான அருணகிரிநாதர் தனது தவற்றை உணர்ந்து கொண்டப் பின் ஆலய கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் அவரைக் காப்பாற்றிய முருகன், அவருக்கு திருநீறையும், ஜெப மாலையும் தந்தார் (திருப்புகழ் v. 106). அதன்பின் அருணகிரி முருகனின் அனைத்து தலங்களுக்கும் விஜயம் செய்து அவரை துதித்து திருப்புகழ் மற்றும் பல பாடல்களைப் பாடினார். அதற்கு முன்னால் அவருக்கு தனது புனித பாதங்களை முருகப் பெருமான் ஸ்வாமிமலை ஆலயத்தில் காட்டினார் (திருப்புகழ் v. 199). காளிதேவியின் பக்தரான திருவண்ணாமலையின் அரசன் ஒருமுறை அருணகிரிநாதரிடம், அனைவர் முன்னிலையிலும் முருகனைக் காட்ட வேண்டும் என்று கட்டளை இட முருகன் அனைவர் முன்னிலையிலும் அங்கு தோன்றி அருணகிரிநாதருக்கு கொடுக்கப்பட்டு இருந்த மரண தண்டனையில் இருந்து அவரைக் காப்பாற்றினர்.

இன்னொருமுறை வில்லிபுத்தூரார் என்ற வைஷ்ணவருக்கும், அருணகிரினாதருக்கும் நடைபெற்ற பாடல் போட்டியில் அருணகிரிநாதர் பாடிய கந்தரந்தாதி என்ற பாடலுக்கு வில்லிபூத்தூரரால் விளக்கம் தர முடியவில்லை. அதனால் தோல்வியுற்ற வில்லிபுத்தூரார் தமது காதுகளைக் கிழித்துக் கொள்ள முயன்றபோது அருணகிரிநாதர் அவரை தடுத்து அந்த துன்பத்தை ஏற்றுக் கொண்டவில்லிபுத்தூராரை முருகனின் அருளினால் காப்பாற்றினார். அது போல இன்னொருமுறை திருவண்ணாமலை மன்னன் அருணகிரிநாதரிடம் தேவர்களின் இருப்பிடத்தில் இருந்து ஒரு மலரைக் கொண்டு வருமாறுக் கூற அதைக் கொண்டு வர சென்ற அருணகிரிநாதர் தன்னை ஒரு கிளிப் பறவையாக மாற்றிக் கொண்டு பறந்து சென்றதும், அவர் திரும்பி வருவதற்கு முன்னரே அந்த மன்னன் அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். ஆகவே அதுமுதல் அருணகிரிநாதர் பார்வதியின் கையில் நிரந்தரமாக கிளிப் பறவை உருவில் தங்க வேண்டி இருந்தது. அருணகிரிநாதரின் அற்புதமான கருத்துக்களைக் கொண்ட முருகன் மீதான பாடல்கள் காலத்துக்கும் அழியாமல் நிற்பவை.

காசியப்ப சிவாச்சாரியார்

இவர் தமிழில் கந்தபுராணத்தை இயற்றியவர். இதில் உள்ள முதல் வரிகளை தமது பக்தர்களுக்காக கந்தனே இயற்றினார். சிவாச்சாரியார் இதை இயற்றி வெளியிட்டபோது ஒரு புலவர் எழுந்து அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, முருகனே அங்கு தோன்றி அந்த எதிர்ப்பை வலிவிழக்கச் செய்தார். வேலவின் மீது அபார பக்தி கொண்ட சிவாச்சாரியார் இன்றும் மக்களிடையே பிரபலமாகவே இருக்கின்றார்.

குமரகுருபரர்

இவர் ஐந்து வயதானவரை ஊமையாக இருந்தார். ஆகவே அவருடைய பெற்றோர்கள் அவரை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று ஆறுமுகனை வேண்டினார்கள். அதன் பின் அவருக்கு பேச்சு வந்துவிட்டது. அதன் பின் பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்த அவர் முருகன் மீது கந்தர்கலி வெண்பா மற்றும் வேறு பல பாடல்களைப் பாடி உள்ளார். அவர் வாரணாசியில் சைவ மடத்தை நிறுவி சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர். அவரைப் பொறுத்தவரை முருகனை அவர் குழந்தையாகவே பார்த்தவர். முத்துகுமாரஸ்வாமி பிள்ளைத் தமிழ் என்ற பாடலை இயற்றினார்.

Chidambara Munivar

திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்

திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் முருகன் மீதான பல பாடல்களை இயற்றி உள்ளார். அவர் முருகனை ஒரு தாயுள்ளம் படைத்தவராகவும், ஒரு தாயார் எப்படி தமது குழந்தைகளுக்கு அன்பைக் காட்டி வளர்க்கின்றார் என்பதைக் எடுத்துக் கூறி முருகன் மீதான பாடலை பாடி உள்ளார் (திருப்போரூர் சன்னிதி முறை ). மதுரை தமிழ் சங்கத்தில் இருந்த புலவர் ஒருவரின் வம்சாவளியிரான திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், திருப்போரூர்ரை கண்டு பிடித்து அதை சீர்படுத்தியவர். முன்னர் உண்மையில் அந்த இடம் பனைமரங்கள் அடர்ந்த வனப்பிரதேசமாக இருந்தது. அங்கு ஒரு மண் புற்றில் முருகன் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருந்தார். திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் அந்த புற்றில் இருந்த முருகனின் சிலையைக் கண்டுபிடித்து எடுத்து, அங்கு ஆலயத்தை அமைத்து அதில் முருகனின் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

சுப்ரமணிய முனிவர்

இவர் முருக பக்தர் மட்டும் அல்ல, மிகப் பெரிய புலவரும் ஆவார். அவர் முருகனைப் போற்றிப் தணிகை திருவிருத்தம் என்பதைப் பாடி கண் பார்வையை இழந்துவிட்ட ஒரு பக்தருக்கு கண் பார்வை கொடுக்குமாறு முருகனை வேண்டினார். அவர் வேண்டுகோளை ஏற்ற முருகன் அவர் கேட்ட வரத்தை அருளினார்.

வள்ளலார்

இந்த வடலூர் துறவி சமரச சன்மார்கத்தை போதித்தவர். ஞான தேசிகன் என்ற உருவில் வந்த முருகன் இவருக்கு அருள் புரிந்தார். அவர் இயற்றிய திருவருட்பா (ஐந்தாம் திருமுறை, தேவமணிமலை) ஆறுமுகன் மீது அவர் கொண்டு இருந்த பக்தியை எடுத்துக் காட்டி, அவர் பாதத்தில் சரண் அடைந்தால் அடுத்தடுத்த ஜென்மங்களில் நல்லவை நடக்கும் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

தேவராஜா ஸ்வாமிகள்

Vallimalai Satchidananda Swamigal முருகன் பக்தி இயக்கத்திற்கு பெருமை சேர்த்தவர்களில் கந்தர் ஷஷ்டி கவசத்தை இயற்றிய தேவராஜா ஸ்வாமிகளும் ஒருவர். ஸ்கந்தனின் அருளினால் அவருடைய பிரச்சனை தீர்ந்தது. அதை அழகான செய்யுள் போன்றக் கவிதையில் அவர் பாடி உள்ளார். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தோன்றும் நோய்களின் அடிப்படைக் காரணங்களையும், மனத் துயர்களின் காரணங்களையும் கூறி, அந்த நோய் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் எப்படி முருகனின் வேல் நிவர்த்திக்கின்றது என்பதை அதில் பாடலாகப் பாடி உள்ளார். அது மட்டும் அல்லாமல் முருகன் எந்தெந்தப் பெயர்களில் வழிபடப்படுகிறார் என்பதையும் கூறி உள்ளார்.

வள்ளிமலை ஸ்வாமிகள்

மைசூர் மகராஜரின் சமையல்காரராக இருந்த அர்த்தநாரி என்ற இவர் கடுமையான வாயிற்று வலியினால் அவதிப்பட்டு பழனி ஆண்டவரிடம் சரண் அடைந்து குணம் அடைந்தார். அதன் பின்னர் அவர் திருவண்ணாமலையில் இருந்த சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் சிஷ்யராகி, அவர் அறிவுறுத்தியபடி வள்ளி மலைக்குச் சென்றார். அங்கு சென்று முருகன் வழிபாட்டு மரபை போதித்தார். அவர் திருப்புகழ் எனும் பாடலைப் பாடி உள்ளார். அவர் எப்போது முருகனை துதித்தாலும், முருகன் அவருக்கு மயிலாக வந்து காட்சி தந்தாராம் (பத்மநாபன், p. 18).

Pamban Swami's vision of Muruga and two peacocks

பாம்பன் ஸ்வாமிகள்

சட்டப்பன் மற்றும் செங்கமலம் என்ற பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் அப்பாவு. அவரை குமாரகுருதாசன் அல்லது பாம்பன் ஸ்வாமிகள் என்றும் அழைப்பார்கள். அவர் முருகனின் பெரும் பக்தர். 1923 ஆம் ஆண்டு அவர் ஒரு விபத்தில் சிக்கி இடது கணுக்கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றதும், அவரது முறிந்து விட்ட கணுக்காலை மருத்துவத்தினால் நிவாரணம் செய்ய இயலாது என மருத்துவர்கள் கை விட்டு விட்டார்கள். ஆனால் அவர் மனதை தளர விடவில்லை. அவர் தனது பந்தத்தை துறந்து முருக பக்தரானார். முருகனிடம் தனது நோயை நிவர்த்திக்குமாறு வேண்டிக் கொண்டார். மருத்துவ மனையில் இருந்தபோது அவரது இடது கணுக்கால் முட்டியை அங்கு வந்த இரண்டு மயில்கள் வருடிக் கொடுத்தன. அவ்வளவுதான் அவருடைய கால் வலி உடனே நின்றது. அதைத் தவிர முருகன் ஒரு குழந்தையின் உருவில் வந்து தனது வேலினால் அவரது முறிந்து போன காலை தடவி விடுவது போல உணர்ந்தார். அதன் பின் அவர் கால் நல்ல நிலைக்கு வந்துவிட்டது. அவர் பாடிய ஷண்முகக் கவசத்தை பக்தியோடு பாடினால் பல நோய்கள் விலகும், மன பயமும் ஒழியும் என்பது நம்பிக்கை. ஒருமுறை அவருக்கு முருகனே நேரில் காட்சி தந்தார். முருகன் மீது பல பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.

முத்துஸ்வாமி தீட்சிதர்

கர்நாடக பாடல் கீர்த்தனைகளை இயற்றி உள்ள இந்த இசை ஞானிக்கு திருத்தணி ஆலயத்தில் முருகப் பெருமான் சிறுவன் உருவில் காட்சி தந்துள்ளார். அது முதல் அவருடைய கீர்த்தனைகளில் முடிவாக குருகுஹா என்ற வார்த்தைகள் இருக்கும் வகையில் அவற்றை இயற்றினார் (N. பத்மநாபன், p. 225)

குணசீலர்

ஐவரும் முருக பக்தர். புலவர். ப்ரிதிவாட்டி பயங்கரன் என்பவர் ஒருமுறை இவரை பாடல் போட்டிக்கு அழைத்தார். குணசீலரும் அதில் வெற்றி அடைய முருகனின் அருளை வேண்டினார். ஆனால் அந்த போட்டியில் அவரே ஆரம்பித்த பாடலை முடிக்க முடியாமல் திணறியபோது, அவரால் புறங்கணிக்கப்பட்ட சிஷ்யர் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்த ஆட்டிடையன் ஒருவர் அதை முடித்துக் கொடுத்தார். அந்த சிஷ்யரின் வாதத் திறமையை பார்த்த பயங்கரன், சிஷ்யரின் திறமையே இப்படி உள்ளது என்றால், குரு இன்னும் எத்தனை திறமையாக இருப்பார் என எண்ணி பயந்து கொண்டு குணசீலரின் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னரே குணசீலர் அங்கு வந்து தன்னைக் காப்பாற்றியது முருகனே என்பதை உணர்ந்து கொண்டார். (P.L. முத்துகுமரன், முருகன் அருட் செல்வம், pp. 579 – 580, 1998, சென்னை).

பகழிகுட்டர்

இவர் ஒரு வைஷ்ணவராக இருந்தாலும், முருக பக்தி மிக்கவர். அவருக்கு ஒருமுறை தீராத வாயிற்று வலி வந்தபோது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடலை பாட அவருடைய வயிற்று வலி நின்றது. அந்த காலத்தில் சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்களிடையே கருத்து வேற்றுமை ஓயாது இருந்து கொண்டு இருந்ததினால், முருகனிடம் பக்தி கொண்டு இருந்த இவரை வைஷணவர்கள் மதிக்காமல் இருந்தார்கள். ஆனால் முருகன் தன்னுடைய பக்தரை அந்த நிலையில் இருக்க விடவில்லை. அவருடைய பக்தியின் மேன்மையை உலகிற்குக் காட்ட விரும்பினார். ஆகவே ஆலயத்தில் தன்னுடையக் கழுத்திலிருந்த மாணிக்க மாலையை பகழிகுட்டரின் கழுத்தில் விழ வைத்தார். ஆலயத்தில் அதைக் காணாமால் தேடிய அதிகாரிகள் அந்த மாலை பகழிகுட்டரின் கழுத்தில் இருந்ததைக் கண்டு தம்முடைய தவறை உணர்ந்து அதுமுதல் பகழிகுட்டருக்கு தகுந்த மரியாதையை தந்தார்கள்.

சிதம்பர முனிவர்

17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சிதம்பர முனிவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவஞான யோகி என்பவருடைய சிஷ்யராக இருந்தார். அவருடைய நோயை ஆறுமுகப் பெருமான் தீர்த்து வைத்தார் (ஷேத்திரகோவை பிள்ளை தமிழ்). முருகனைக் குறித்து நிறையப் பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.

பல்வேறு பண்பாடுகளை காட்டுபவர்

kavadi

குறிஞ்சியின் கடவுளான முருகன் பழங்குடி இனத்தவரின் தன்மைகளைக் கொண்டவர். அந்த மலைவாழ் மக்கள் முருகனை தெய்வப் பிறவியாகவே ஏற்று, அவரே தம்மை இயற்கை அழிவு மற்றும் கொடிய வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பவர் என்று நம்பினார்கள். அவர்கள் வேடுவர்கள் என்பதினால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் வேல் போன்ற ஈட்டிகளையே பயன் படுத்தி வந்தார்கள். அதனால்தானோ என்னவோ அதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்க சக்தி தேவியானவள் அசுரனைக் கொல்ல முருகனுக்கு வேல் எனும் ஆயுதத்தைக் கொடுத்தாள். வேல்கம்பு என்பது முருகனுடைய பலத்தை மட்டும் காட்டுவதாக அமையவில்லை, அது வேடுவர்களின் தன்மையைக் குறிக்கும் ஒரு சின்னமாகவும் ஆயிற்று. வேடர்கள் அவரை மலை மீது வழிபடுகிறார்கள். சங்க இலக்கியங்கள் வேலன் வெறியாடல் என்ற பழக்கம் இருந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. வேல்கம்பு என்பது முருகனுக்கு மட்டும் அல்ல வேடர்களுக்கும் அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத முக்கியமான ஆயுதமாயிற்று. முருகன் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் முருகனுக்குப் காவடி எடுத்தும், அவருக்குப் படைக்க பால் குடம் ஏந்தியும், உடல் முழுவதும் சிறிய அல்லது பெரிய அளவிலான வேல்களை குத்திக் கொண்டும் செல்வார்கள். முருகன் இளமையும், அழகையும் கொண்டவர் என்பதினால் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் இந்தப் பழக்கங்களை வைத்துக் கொண்டு உள்ளார்கள்.

நகர்ப்புறங்களில் கூட முருக வழிபாட்டு மரபு பரவி வருவதினால் அங்கும் சில ஆலயங்களில் மலைப் போன்ற அமைப்பை அமைத்துள்ளார்கள். முருகன், வள்ளி, தெய்வானை போன்றவர்களின் சிலைகள் போற்றத் தக்க வகையில், அழகுற செய்யப்பட்டு, ஆலயங்களில் வைக்கப்பட்டு முறையான வழிபாடுகள் மற்றும் விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். அனைத்து பிரிவு மேல்குடி மக்களும் கூட முருக வழிபாட்டு மரபு முறையை வெவேறு வழிகளில் பரப்பி வருகிறார்கள். கிராமிய மக்களும் கூட முருகனுக்கு தகுந்த சடங்குகளை செய்தும் விழாக்கள் எடுத்தும் அவரை வழிபாடு செய்கிறார்கள்.

கலிதீர்த்தவர்

எங்கெங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம் தமது தெய்வீக சக்தியைக் காட்டி தவறு செய்பவர்களை திருத்தியும், அவர்கள் தாமே தமது குற்றங்களை அறிந்து கொள்ளவும் வழி வகுக்கின்றார். அதனால்தான் மனித உருவெடுத்து வந்து தம்மை அனைவரும் எளிதில் காண வழி வகுத்தார். வள்ளியை அடையும் முன்னர் கூட தன்னை ஒரு வேடனாகவும், வயதானவராகவும் காட்டி அதன் பின்னரே தமது தெய்வீகத்தை வெளிப்படுத்தினார். முரட்டுத் தனமாக அடங்காமல் இருந்த செம்மறி ஆடு, மயில் மற்றும் சேவலை அடக்கி அவற்றுக்கு அருள் புரிந்தார். தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, நாரத முனிவர் செய்த யாகத்தில் அடக்க முடியாமல் இருந்த செம்மரியாட்டை வீரபாகுவை அனுப்பி பிடித்து வரச் செய்து அதை தனது மலைக் குன்றாக்கிக் கொண்டார்.

அது போலவே சூரபத்மன் தன்னை மாமரமாக மாற்றிக் கொண்டபோது தனது சக்தி வேலினால் அதை இரண்டாகப் பிளந்து அவற்றை சேவல் மற்றும் மயிலாக மாற்றினார். சேவல் அவருடையக் கொடியின் சின்னமாகவும், மயில் அவருடைய வாகனமாகாவும் மாறின.

முஸ்லிம் சமுதாயத்தினரால் போற்றப்படுபவர்

சில முஸ்லிம் சமுதாய மக்களும் அவரை வணங்குகிறார்கள் என்பது வியப்பைத் தரும். கந்தர் அலங்காரத்தில் முருகனை ராவுத்தர், அதாவது மாவீரன் என்று அருணகிரிநாதர் அழைத்துள்ளார் (V. மறவேன் 1.8). அதுபோலவே சிதம்பர சுவாமிகளும் அவரை துருக்கர் (முஸ்லிம்) எனக் கூறி உள்ளார். கொங்கணர், ஐயர், உடையார் , கோசலர், குர்ஜராஸ், சிங்களவர் (இலங்கைன்), சௌணக்கார், வந்கலர், எளர் (இலங்கைன் தமிழர்), தெலுங்கர், அங்கர், கலிங்கர், மற்றும் கன்னடியர் போன்றவர்களும் முருகனை தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர் (N. பத்மநாபன், p. 9).

திருத்தணி மலை உச்சியில் இருந்து கிழக்குப் பகுதி கார் தெருவு தெரியும். அங்கிருந்த நவாப் ஒருவர் பல கிலோ அளவிலான கற்பூரத்தை ஏற்றி வைக்கும் அளவிற்கான மிகப் பெரிய அண்டா ஒன்றை அந்த ஆலயத்துக்கு தந்ததும் அல்லாமல், முஸ்லிம் மக்களின் இசைக் கருவிகளை தினமும் இசைக்க ஒரு மண்டபத்தையும் தானமாகத் தந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட ஒரு தொல்லையை விலக்கியதினால் (இபிட், p. 236) ஒரு சிவன் ஆலயத்தைக் கட்டி அதற்கு பிரசன்னா காடரீஸ்வரம் என்ற பெயரை சூட்டி தனது பக்தியை வெளிப்படுத்தினார். திருத்தணி மலைமீது உள்ள ஆலயத்தில் வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு முருகப் பெருமான் ஒரு பகீரைப் (இபிட், p. 236) போலக் காட்சி தந்ததினால் அவரை இந்துக்களுடன் சேர்த்து முஸ்லிம் சமுதாய மக்களும் வணங்குகிறார்கள். [ஆசிரியரின் குறிப்பு :- சமீபகாலம்வரை திருத்தணி படை விழாவில் முஸ்லிம் சமுதாய பாடகர்களும் கௌரவப் பாடகர்களாக அழைக்கப்பட்டு பாடல்களைப் பாட அங்கு ஏற்பாடுகளை செய்து வந்தார்கள். இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்கு வருடா வருடம் நூற்றுக் கணக்கான முஸ்லிம் சமுதாயத்தினர் வருகை தருகிறார்கள்.

படர்ந்துவரும் இந்தியக் கலை

முருக வழிபாட்டு மரபு இந்தியாவின் பல பாகங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பரவி வருகிறது. கார்திகேயரின் ஆலயங்கள் இலங்கைா, பர்மா, மலேஷியா, சிங்கப்பூர் , மௌருஷியஸ், இந்தோனேஷியா, பிலிபீன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந், ஆப்ரிக்கா, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் சென்று குடியமர்ந்துள்ள இந்துக்களினால் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு முருகனுக்கு ஏற்ற அனைத்து சடங்குகளும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. அங்கு நடைபெறும் ஆலய விழா மற்றும் பண்டிகைகளில் கிராமிய கலையான காவடி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தைபூசம், கிருத்திகை, வைகாசி விசாகம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இந்தியா மற்றும் இந்தியாவிற்கு வெளியில் உள்ள நாடுகளில் கட்டப்பட்டு உள்ள முருகன் ஆலயங்களில் பல்வேறு வகைகளிலும் பக்தர்கள் வழிபாட்டை செய்கிறார்கள். அது திருவிழா போலவே காட்சி அளிக்கும் வகையில் நடைபெறும்போது அனைத்து பிரிவையும் சேர்ந்த பக்தர்கள் திரளாக அங்கு சென்று அதில் கலந்து கொள்கிறார்கள்.

ஆணவத்தையும், அறியாமையும் அழித்தவர்

Avvaiyar and Murugan
Murukan teaches Avvaiyar a lesson
Murugan punishes Brahma for his pride and ignorance
Murukan punishes Brahma for his pride and ignorance

பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தவர் முருகன்

அகந்தை மற்றும் அறியாமை என்ற இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பின்னி உள்ளதினால் ஞானப் பண்டிதரான முருகன் பிரும்மாவின் அகந்தை மற்றும் அறியாமையை அழித்தக் கதை ஒன்று உள்ளது.

சங்க காலத்தை சேர்ந்த அவ்வையார் எனும் ஞானப் பெண்மணி தனது அறியாமையை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று உள்ளது. ஒருமுறை அந்தப் மூதாட்டி மதுரைக்குப் போய் கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு நாவல் மரத்தின் அடியில் சென்று அங்கு அமர்ந்து கொண்டு இருந்தாள் . அப்போது ஆட்டிடையன் உருவில் அங்கு வந்த முருகன் மரத்தில் ஏறிக் கொண்டு அவளிடம் சுட்டப் பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டார். அவளோ தனக்கு சுடாத பழமே வேண்டும் என்றாள். அவர் மரத்தில் இருந்து பழங்களைப் பறித்து வேண்டும் என்றே சிலவற்றைக் கீழே போட அதை பொறுக்கி எடுத்துக் கொண்டவள், அதன் மீது ஒட்டிக் கொண்டு இருந்த தூசியை தட்டுவதற்காக அந்தப் பழங்களை வாயினால் ஊதினாள். உடனே அந்த சிறுவன் அவளிடம் நீயேன் சுட்டப் பழங்களை எடுத்துக் கொள்கிறாய் எனக் கேட்க அப்போதுதான், அவ்வையாருக்கு தனது அறியாமை புரிந்தது. அதன் அர்த்தத்தை அவரிடம் இருந்து தெரிந்து கொண்டவளுடைய அகந்தை மற்றும் அறியாமை அன்று முதல் அழிந்து போக அவள் எளிய வகையில் வாழத் துவங்கினாள். (திருப்புகழ் 441).

சிவபெருமான் தான் நாரதரிடம் இருந்துப் பெற்றுக் கொண்ட மாம்பழத்தை யாருக்கு தருவது என முடிவு செய்வதற்காக ஒரு போட்டி வைத்தார். தனது இரண்டு புதல்வர்களான முருகனையும், கணேஷரையும் உலகை சுற்றிவிட்டு வலம் வருமாறு கூறி போட்டியை துவக்க முருகன் உடனேயே தனது மயில் மீது ஏறி அமர்ந்து கொண்டு உலகை சுற்றக் கிளம்பினார். ஆனால் அதில் எளிமையான மற்றும் புத்திசாலியான விநாயகர் தன்னுடைய பெற்றோர்களை சுற்றி விட்டு அந்தப் பழத்தைப் பெற்றுக் கொண்டார். அதுவே முருகனின் அகந்தையை அழித்தது. ஆகவே அவ்வையாரின் சம்பவம் இதற்கு முன்னரே நடைபெற்று இருந்திருக்க வேண்டும்.

அதுபோல கைலாசத்துக்கு வந்த பிரும்மா முருகனை மதிக்காமல் இருக்க, அதனால் கோபமுற்ற முருகன் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை பிரும்மாவிடம் கேட்க , அவரால் அதை சரிவர கூற முடியாததினால் அவரை சிறை பிடித்து வைத்தார். அதன் பின் சிவபெருமானே பிரும்மாவை மீட்டுக் கொண்டு செல்ல வந்தபோது முருகன் சிவபெருமானையே தன்னுடைய மாணவராக ஏற்றுக் கொண்டு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தைக் கற்றுக் கொடுத்தார். பிரும்மாவிற்கு அவர் கொடுத்த தண்டனை அவருடைய செருக்கு அல்லது தலைகனத்தைக் குறைக்கவே தவிர வேறு எதற்கும் இல்லை. சர்வ வல்லமை படைத்தவர் என்றாலும் சிவபெருமான் எளிய முறையில் தனது மகனிடம் வந்து பாடம் கற்றுக் கொண்டது முருகனின் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டவே.

சிவபெருமானின் பெரும் பக்தரான பொய்யாமொழிப் புலவர் என்பவர் ஒருமுறை, தான் பாடினால் சிவனை மட்டுமே போற்றிப் பாடுவேன் என்று கூறி விட்டு முருகனைப் போற்றிப் பாட மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் ஒரு வேடன் வேடத்தில் வந்து அந்த முனிவரிடம் சிவனும் முருகனும் ஒருவரே என்றும் அவர்களுக்குள் வித்தியாசம் இல்லை என்றும் எடுத்துக் கூறி அவருடைய அகந்தையை அழித்தார் (முத்துகுமரன், p. 578).

முடிவுரை

முருக வழிபாட்டு மரபு இந்தியாவில் ஆழமாக வேர் ஒன்றி உள்ளது. அந்த மரபு அதிக மக்களை கவர்வது மட்டும் அல்லாமல் பக்தர்களிடையே ஒற்றுமை மற்றும், ஒன்றிணனைந்து செயலாற்றுவதை போதிக்கின்றது. முருகனைப் பற்றி போற்றும் இலக்கியங்கள் பல உள்ளன. கந்தர்ஷஷ்டி கவசம், ஷண்முகக் கவச்சம், சுப்பிரமணிய புஜாங்கம், கந்தர் அழக்காரம், கந்தர் அனுபூதி, திருமுருகாற்றுப் படை, கந்த புராணம், தணிகை புராணம், திருச்செந்தூர் புராணம் போன்றவை அவற்றில் சில. அவற்றைத் தவிர ஆலய ஸ்தலப் புராணங்களும் பக்தர்களால் படிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே சமய நூல்கள் என்பதாக மட்டும் இல்லாமல் அங்கு, தியாகம், தவறு செய்யும்போது ஏற்படும் பய உணர்ச்சி போன்ற அனைத்தையும் மனித குலத்துக்கு எடுத்துக் காட்டும் வகையில் உள்ளன.

ஒரியா கடவுளான முருகனே பல உருவங்களை எடுத்து எவை செய்யக் கூடியவை, எவை செய்யக் கூடாதவை என்பதை உலகிற்குக் காட்டுகிறார். அவருடையப் பிறப்பே ஒரு முக்கியக் காரணத்திற்காக அமைந்தது என்பதினால் அதையும் அவர் நிறைவேற்றினார். அவருக்கு பெற்றோர்களின் அன்பு, சகோதரப் பாசம், அரச பதவி, தெய்வீகம் என அனைத்தும் கிடைத்தது.ஏற்பாடு செய்யப்படும் திருமணம் மற்றும் காதல் திருமணம் என்ற இரண்டின் முக்கியத்துவத்தையும் காட்டினார், படைத் தலைவராக இருந்து தனது பராகிரமத்தைக் காட்டினார். நீதியை நிலைநாட்டினார். தனது பக்தர்களின் துயர்களை தீர்த்தார். ஞானம், இளமை மற்றும் அழகைக் காட்டினார். அவை அனைத்தையும்விட அவர் தமிழர்களின் கடவுளாக உள்ளார். அவருடைய பல்வேறு தோற்றங்கள் பல்வேறு குணங்களைக் எடுத்துக் காட்டின. அவரை நம்மால் எடை போட முடியாது, நமது அறிவுத் திறனுக்கும அப்பாற்பட்டவர் என்றாலும் அவரை நம்மால் அடைய முடியும்.

References

Primary Sources

  1. Adi Sankara Śrī Shanmukha Bhujankam
  2. Arunagirinathar Tiruppukal
  3. " Kantaralankaram
  4. " Kantaranuputi
  5. " Kantarantati
  6. BalanDevaraya Adikal Kandasashti Kavacam
  7. Balasubramania Kavirayar Palani Sthalapuranam
  8. Kacciappa Sivachariyar Kantapuranam
  9. Nakkirar Tirumurukarrupadai
  10. Kumaraguruparar, Muttukumarasami Pillaitamizh
  11. Pampan Swamikal, Shanmuka Kavacam
  12. Tirumular Tirumantiram
  13. Venrimalai Kavirayar Tanikai Arruppadai
  14. " " Tirucentur Sthalapurana

Secondary Sources

  1. Atmananda, Swami (trans.) Śrī Kantapuranam
  2. Basham, A. L. The Wonder that was India , London 1954
  3. Krishnan, Nagarkoil Tirumurukan Tiruttatankal, Chennai
  4. Muthukumarn, P. L. Murukan Arutcelvam, Chennai 1998
  5. Padmanabhan, N. Six Abodes of Arumukan, Chennai 1997
  6. Sathyanathan, Amman Worship of Muruka, Chennai 1996
  7. Shanmukam, N.P. Murukan Religion – Its Relevance to Modern Man, Chennai 1998
  8. Subramanian, N. Sangam Polity, Bombay 1996

The Author:

டாக்டர் திருமதி பாலம்மாள் சென்னை பல்கலைக் கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணிபுரிந்து விட்டு ஒய்வு பெற்றவர். அவர் நான்கு புத்தகங்களையும் அறுபதுக்கும் மேற்பட்ட சமூக, மத மற்றும் தமிழ்நாட்டு கலை குறித்த கட்டுரைகளை எழுதி உள்ளார்.

Prof. Dr. Mrs. V. Balambal, M.A., B.T., Ph.D., F.R.A.S. (London)
159, 94th Street, 15th Sector
KK Nagar Chennai - 600 078 India

E-mail: drbala50@hotmail.com

Murukan Conference
 
Prof. V. Balambal (right) addresses a Murukan Conference session.

"Murukan the Protector and Healer" by Prof. Dr. Mrs. V. Balambal
"Facets of Murukan" by Prof. Dr. Mrs. V. Balambal
"Sacred Trees in Murukan Temples" by Prof. Dr. Mrs. V. Balambal
Index of research articles from International Conferences on Skanda-Murukan